திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் தங்கத்தகடுகளை தாமிர தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உள்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஆனால் கேரளாவில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9 மற்றும் 11-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக துவார பாலகர் சிலைகள் மற்றும் சபரிமலை கோவில் கதவு நிலைகளை தனது வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த நடிகர் ஜெயராமை கைது செய்து விசாரிக்க, விசாரணை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் தேவஸ்தான தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மகுமார் கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்மகுமாரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவுக்கு கோர்ட்டு நேற்று அனுமதி வழங்கியது. தங்கம் அபகரிப்பு விவகாரம் தொடர்பாக சபரிமலை அய்யப்பன் கோவிலின் மூத்த தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு மோகனரு ஆகியோர் சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.