Bollywood: “சுஷாந்த் மரணத்திற்கு பாலிவுட் மாஃபியாதான் காரணம்" – உடைத்துப் பேசும் நடிகை தனுஸ்ரீ!

பாலிவுட் திரையுலகில் நிலவும் அசாத்தியமான சூழல்கள் மற்றும் “பாலிவுட் மாஃபியா” (Bollywood Mafia) குறித்தும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் நடிகை ஜியா கான் ஆகியோரின் மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள் குறித்தும் நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் விவாதத்தைத் தொடங்கியிருக்கிறார்.

சமீபத்தில் ‘மேரி சஹேலி’ (Meri Saheli) இதழுக்கு அளித்த பேட்டியில், தனுஸ்ரீ தத்தா எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பேசியிருக்கிறார். அதில், “பாலிவுட்டில் மாஃபியாக்கள் இருப்பது முற்றிலும் உண்மை. அதனால்தான் இன்று ஜியா கானும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் நம்மிடையே இல்லை.

சுஷாந்த் சிங் ராஜ்புத்

அப்படி ஒரு மாஃபியா கும்பல் இல்லையென்றால், திறமையான இந்த வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். அவர்கள் பெரும் துயரத்தில் இருந்தார்கள் என்பது வெளியே சொல்லப்படாத விஷயம். அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை நான் நம்பவில்லை. ஒருவேளை தற்கொலைதான் என்று வைத்துக்கொண்டாலும், ஒரு மனிதன் அந்த நிலைக்குத் தள்ளப்படுவது ஏன்?

எந்தவொரு சாதாரண மனிதனும் ஒரு நாள் காலையில் எழுந்து தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவெடுப்பதில்லை. குறிப்பாக வெற்றியைப் பார்த்து, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டவர்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள். ஒருவருக்குள் இருக்கும் சுய உரையாடல்களே தோல்வியடையும் நிலைக்கு அவர் செல்கிறார் என்றால், அதற்குப் பின்னால் ஏதோ ஒரு தீவிரமான விஷயம் நடந்திருக்க வேண்டும்.

நடிகை ஜியா கான்

இது திடீரென நடப்பதல்ல, நீண்ட காலத் துயரத்தின் முடிவு. அவர்களை அந்த நிலைக்குக் கொண்டு வந்தது யார்? திரையுலகின் ஏற்ற இறக்கங்கள் குறித்து நடிகர்களுக்குத் தெரியும். இது நிலைத்தன்மை கொண்ட 9-to-5 வேலை கிடையாது. சில நேரங்களில் படங்கள் ஓடும், சில நேரங்களில் ஓடாது என்பது கலைஞர்களுக்குத் தெரியும். ஆனால் வெறும் தொழில்முறை பின்னடைவுகள் மட்டுமே ஒருவரை இத்தகைய விபரீத முடிவுக்குத் தள்ளாது. அப்படி நடந்தால், அந்த நபரை அந்த திசையில் தள்ளுவதற்கு ஒரு முயற்சி நடந்திருக்க வேண்டும்.

பாலிவுட்டின் மாஃபியா கும்பலுக்கு ஈகோ அதிகம். நீங்கள் அவர்களின் வழியைப் பின்பற்றவில்லை என்றால், அவர்கள் உங்களை எதிரியாகப் பார்ப்பார்கள். நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட விரும்புபவர்கள் குறிவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். சில சக்திவாய்ந்த மனிதர்கள் உங்கள் விதியைத் தீர்மானிக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்படாவிட்டால், அவர்கள் உங்கள் வாழ்க்கையையும் தொழிலையும் அந்தப் பகுத்தறிவற்ற தீய சக்திகள் அழித்துவிடுவார்கள். அவர்களிடம் எந்த தர்க்கமும் இருக்காது.

தனுஸ்ரீ தத்தா
தனுஸ்ரீ தத்தா

மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதும் துன்புறுத்துவதும் மட்டுமே அவர்களின் நோக்கம். நீங்கள் அவர்களோடு சேர்ந்து செயல்படாவிட்டால் உங்களை ‘அந்நியன்’ என்று முத்திரை குத்துவார்கள். நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் உங்களை வெளியே தள்ளிவிடுவார்கள். திரைப்படங்களில் இத்தகைய யதார்த்தங்கள் காட்டப்படும் போதும், உலகளவில் எப்ஸ்டீன் (Epstein case) போன்ற வழக்குகள் வெளிவரும் போதும், அதற்கும் நிஜத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கவே செய்கிறது. வெற்றியைப் பார்த்த ஒருவர் திடீரென்று ஏன் சரணடைய வேண்டும்?” என தனது பேட்டியை கேள்வியுடன் முடித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.