"கவனக் குறைவே காரணம்!" – 'ஜனநாயகன்' பட எடிட்டரை இடைநீக்கம் செய்த படத்தொகுப்பாளர்கள் சங்கம்!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், படத்திற்குச் சென்சார் கிடைக்கத் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது.

இன்று வரை அப்படத்திற்குச் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கூடிய விரைவில் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் சான்றிதழ் பெற்றுவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

Jananayagan - ஜனநாயகன்
Jananayagan – ஜனநாயகன்

சில நாட்களுக்கு முன்பு ‘ஜனநாயகன்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன. அதனைத் தொடர்ந்து முழு படமும் இணையத்தில் நல்ல பிரிண்டில் லீக் ஆனது.

அந்த கசிந்த பதிப்பில் ‘Edit Ref’ என வாட்டர்மார்க் போடப்பட்டிருந்ததால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு அப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் E. ராகவ்தான் காரணம் என இணையத்தில் பேசப்பட்டது.

ஆனால், அதன் பிறகு, ‘ஜனநாயகன்’ லீக் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், படம் கசிந்ததற்குப் பிரதீப் காரணம் கிடையாது எனத் தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர்கள் சங்கம் விளக்கமளித்திருந்தது. ஆனால், இன்று அவரை அச்சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாகத் தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படத்தொகுப்பாளர் திரு. பிரதீப் E. ராகவ் தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல், தொடர்ந்து ‘ஜனநாயகன்’ உட்பட தான் பணியாற்றும் அனைத்துத் திரைப்படங்களுக்கும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராகப் பயன்படுத்துவது சங்கச் செயற்குழு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு சங்கச் சட்ட விதிகளுக்கு எதிரானது. மேலும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாகத் திரு. பிரதீப் E. ராகவ் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Editor Pradeep E Raghav
Editor Pradeep E Raghav

இந்த நிலை தொடர்ந்தால் திரைப்படத் துறையே செயலிழந்து போகும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் கடமை தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்திற்கு உள்ளது.

திரைத்துறையின் பாதுகாப்பு மற்றும் சங்கத்தின் மாண்பைக் காப்பாற்ற வேண்டி 17.04.2026 அன்று நடந்த அவசரச் செயற்குழு கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி படத்தொகுப்பாளர்கள் முன்னிலையில் கலந்தாலோசிக்கப்பட்ட கருத்துகளைக் கவனத்தில் கொண்டு திரு. பிரதீப் E. ராகவைத் தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கம் ‘இடைநீக்கம்’ செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.