சிறையில் இருந்தபடி, குடும்பத்தினரைக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய `குண்டாஸ்’ கைதி – மனைவியும் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவரின் மகன்கள் முபாரக் (வயது 30), அமீர் உசேன் (23). இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைச் செய்த வழக்கில் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டனர். பிறகு, இருவர்மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மற்ற கைதிகளுடன் இருவரும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டனர். இந்த நெட்வொர்க் மூலமாக வெளிமாநிலத்தில் இருந்து `மெத்தபெட்டமைன்’ போன்ற போதைப்பொருள்களை வரவழைத்து உள்ளூரைச் சேர்ந்த தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கைமாற்றி குடியாத்தம் பகுதியில் விற்கத் தொடங்கினார்கள். சிறையிலிருந்தபடி அண்ணன், தம்பி இருவரும் போதைப்பொருள் விற்பனையில் தங்களின் குடும்பத்தினரையும் ஈடுபடுத்தியதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

குண்டாஸ் கைதி முபாரக் – மனைவி சம்ரீன்

இந்த நிலையில், குடியாத்தம் அடுத்துள்ள லட்சுமணாபுரம் மேம்பால பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், பைக்கில் வந்த இருவரை மடக்கினர். பைக்கில் பின்பக்கம் அமர்ந்திருந்த முபாரக்கின் தந்தை சம்சுதீன் தப்பி ஓடினார். பைக்கை ஓட்டிவந்த குடியாத்தம் ஷெரிப் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்த அர்மான் சிவா (30) என்பவர் சிக்கினார். அவரிடம் நான்கு கிலோ எடையிலான கஞ்சா இருந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், முபாரக்கின் மனைவி சம்ரீனுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, முபாரக்கின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த மேலும் நான்கு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சிறையிலுள்ள முபாரக் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். மேலும், முபாரக்கின் மனைவி சம்ரீன் (25) மற்றும் உறவினர் அர்மான் சிவா ஆகிய இருவரையும் கைதுசெய்தனர். தப்பிஓடிய முபாரக்கின் தந்தை சம்சுதீனையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.