'பாஜக புயலை மீறி 82 வயதில் 10வது வெற்றி' – யார் அந்த திரிணாமுல் வேட்பாளர்?

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியைத் தழுவி இருக்கிறது.

இந்தத் தோல்வி அந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம் பா.ஜ.க-வை விட வெறும் 5 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்தாலும் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய வேட்பாளர் சோபந்தேப் சட்டோபாத்யாய் இத்தேர்தலில் 10வது முறையாக வெற்றி பெற்று மம்தா பானர்ஜியின் நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறார்.

பாலிகங்கா தொகுதியில் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட இந்தத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் எண்ணிக்கை சற்று குறைந்து இருந்தாலும், வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டார்.

மம்தா பானர்ஜி 1998ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய பிறகு நடந்த இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பாக வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் சட்டோபாத்யாய்மட்டும்தான்.

சட்டோபாத்யாய்
சட்டோபாத்யாய்

சட்டோபாத்யாய் தனது அரசியல் பயணத்தை 1960களில் கல்லூரி நாட்களில் தொடங்கினார். அவர் முதன்முதலில் 1991ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக பருய்பூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தார்.

அதன் பிறகு 1996 இல் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அரசியல் வாழ்க்கையில், அவரது தொகுதி பல முறை மாறியிருக்கிறது. அது பருய்பூர், ராஷ்பிஹாரி, பாபானிபூர், கர்தா அல்லது பாலிகங்கே என எதுவாக இருந்தாலும், கட்சியின் முடிவை அவர் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டார்.

அப்படி ஏற்றுக்கொண்டதோடு அந்தத் தொகுதியில் வெற்றிக்கனியைப் பறித்துக்கொடுக்கவும் அவர் தயங்கியதில்லை. இந்த முறை, அவரது முன்னாள் சட்டமன்றத் தொகுதிகளை பாஜக வேட்பாளர்கள் வென்றாலும், அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றி குறித்து சட்டோபாத்யாய் கூறுகையில், ”நான் பிரசாரம் செய்யத் தொடங்கும் முன்பே இந்தப் பகுதி மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள், இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசாக உணர்கிறேன்.

எங்களது கட்சி வேட்பாளர்கள் குறிப்பாக மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

தொகுதிகள் மாறினாலும் தொடர்ந்து 10வது முறையாக சட்டோபாத்யாய் தனது 82வது வயதில் இத்தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.