'இந்தியாவில் இன்று பிரதமர் இல்லை!' – மோடியை டேமேஜ் செய்த ராகுல்!

இந்தியாவில் இன்று பிரதமர் இல்லை என்றும், மக்கள் பேச்சை கேட்காத ராஜா தான் இருக்கிறார் என்றும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

உத்தரகண்ட்
மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில், பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று, உத்தரகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கிச்சா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதாவது:

கொரோனா தொற்று காலக் கட்டத்தில், ஓராண்டு காலமாக விவசாயிகளை சாலைகளில் காத்திருக்க வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இது போன்ற காரியங்களை காங்கிரஸ் கட்சி தன் வாழ்நாளில் ஒருபோதும் செய்யாது. விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணியை மட்டுமே விரும்புகிறது. அவர்களுடன் சேர்ந்து செயல்பட விரும்புகிறது.

ஒரு பிரதமர் அனைவருக்கும் உழைக்கவில்லை என்றால், அவர் பிரதமராக முடியாது. அந்த அடையாளத்தின்படி, நரேந்திர மோடி பிரதமர் அல்ல. இந்தியாவில் இன்று பிரதமர் இல்லை. மக்கள் தான் முடிவெடுக்கும் போது அமைதியாக இருக்க வேண்டும் என்று நம்பும் ராஜா தான் உள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரோதப் போக்கு ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.