மலையாளத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் பாடிய லதா மங்கேஷ்கர்

இந்திய சினிமாவின் இசையரசி, கானக்குயில் என்றெல்லாம் பெருமை பெற்ற பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று காலமானார். இந்திய சினிமாவுக்கு உலகெங்கிலும் பெருமை தேடி தந்தவர்களில் ஒருவரான லதா மங்கேஷ்கர் இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட 35 மொழிகளிலும் சில அயல்நாட்டு மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். அந்தவகையில் மலையாள சினிமாவில் லதா மங்கேஷ்கர் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் பாடியுள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்று.
1974ல் ராமு காரியத் இயக்கத்தில் வெளியான நெல்லு என்கிற படத்தில் இடம்பெற்ற கதலி செங்கதலி என்கிற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். சலீல் சவுத்ரி இசையில் உருவான இந்தப் பாடலை ராமுவர்மா என்பவர் எழுதியிருந்தார். இந்தப் பாடல் வரிகளை மலையாளத்தில் எப்படி உச்சரிக்க வேண்டும் என லதா மங்கேஷ்கருக்கு சொல்லிக் கொடுத்தவர் கே.ஜே.ஜேசுதாஸ்
அதற்கு முன்னதாக செம்மீன் படத்திலேயே கடலினக்கரை போனோரே என்கிற பாடலுக்கு லதா மங்கேஷ்கரை பாட வைக்க இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி முயற்சித்தார். ஆனால் சில காரணங்களால் அது நிறைவேறாமல் போனது. அதைத்தொடர்ந்து நெல்லு படத்தில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தபோது லதா மங்கேஷ்கரை அழைத்து பாடவைத்தார் சலீல் சவுத்ரி.
அதேபோல லதா மங்கேஷ்கர் பாடிய அந்தப் பாடலில் நடிக்கும் பெருமை நடிகை ஜெயபாரதிக்கு கிடைத்தது. அதுபற்றி தற்போது கூறியுள்ள ஜெயபாரதி, “அந்தப்பாடல் படமாக்கப்படும்போது எனக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் 20 வருடம் கழித்த பின் தான் நாம் எவ்வளவு பெரிய பாக்கியம் பெற்றுள்ளோம் என்பதை என்னால் உணர முடிந்தது. மலையாளத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய ஒரே ஒரு பாடலில் நான் நடித்தது எனக்கு கிடைத்த பெருமை.. ஒருமுறையாவது அவரை சந்தித்து விட நினைத்தேன். ஆனால் கடைசிவரை என் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது', என்று கூறியுள்ளார் ஜெயபாரதி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.