இந்தியா மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம் நாடு முக்கியமா? மதம் முக்கியமா என்று காட்டமாக கூறியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், இந்து கோவில்களில் மற்ற மதத்தில் நுழையக்கூடாது என வாசலில் போர்டு வைக்க உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  பல வழிபாட்டுத்தலங்களில் அதற்கு உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப் பட்டு வருகிறதே என்று கூறியதுடன் இதுபோன்ற அறிவிப்புகள் தேவையா என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோயிலில் ஆண் பக்தர்கள், மேலாடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. அதுபோல பல கோவில்களில் சில நடவடிக்கைகள் உள்ளது. அவர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  நாட்டில் சிலர் ஹிஜாபுக்காகவும், சிலர் கோவில்களில் வேட்டிக்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியதுடன், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா? அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா?   நாடு முக்கியமா அல்லது மதம் முக்கியமா என்று என கேள்வி எழுப்பியதுடன், மதுதாரர்  இது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும், இது மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றது என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து,  மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், ஆடைக் கட்டுப்பாடு விதிகள் குறித்த ஆதாரங்களை தாக்கல்செய்ய மனுதாரருக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.