பயிற்சியின்போது மயங்கிவிழுந்த கால்பந்தாட்ட பயிற்சியாளர்: சோகத்தில் ரயில்வே அணி !

தமிழ்நாடு ரயில்வே கால்பந்தாட்ட வீரர் பயிற்சி மேற்கொண்டபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜா(45). ஐசிஎப்பில் பணிபுரிந்து வந்தார். கால்பந்து விளையாட்டு வீரர். ரயில்வே கால்பந்தாட்ட அணியில் உள்ளார். நேற்று நொளம்பூர் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் கால்பந்தாட்ட பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவருடன் பயிற்சி எடுத்த சகவீரர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
image
அமிர்தராஜா இறந்த தகவலை அறிந்து தமிழ்நாடு ரயில்வே கால்பந்தாட்ட அணி சோகத்தில் மூழ்கி உள்ளது. இவர் திருச்சி ஒய்எம்சிஏ கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். அப்போது கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளார். அதன்மூலம் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐசிஎப்-ல் கடந்த 1998 ஆம் ஆண்டு பணி கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ரயில்வே கால்பந்து அணியில் அமிர்த ராஜா சிறப்பாக விளையாடி அவர் தலைமையில் பல பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றுள்ளனர்.
image
மேலும் ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற உலக ரயில்வே ஊழியர்களுக்கான கால்பந்து போட்டியில் இந்தியன் ரயில்வே அணியில் விளையாடி உள்ளார். இவர் பணியில் சேர்ந்த காலம் முதல் கடந்த 20 வருடங்களாக கால்பந்து விளையாடி வருகிறார். மேலும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டில் ஆர்வத்துடன் இருக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார். இச்சம்பவம் ரயில்வே ஊழியர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அவரிடம் கால்பந்தாட்ட பயிற்சி பெற்ற ரயில்வே ஊழியர்கள் சோகத்தோடு தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.