திருப்பத்தூர்: மனைவி சாவில் மர்மம் .. புகாரில் கைதான கணவர் சிறையில் மூச்சுத்திணறலால் மரணம்

திருப்பத்தூரில் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரில்பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மருமகன், 3 நாட்களில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினி(26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த நந்தினி வீட்டிலுள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி ஆம்பூர் நகர காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
நந்தினியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை முரளி ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜாமணி மீது வழக்குப்பதிவு செய்து நேற்றிரவு ராஜாமணியை கைது செய்து வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ராஜாமணியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து ராஜாமணி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
image
இந்நிலையில், இன்று காலையில் வேலூர் மத்திய சிறையில் இருந்த ராஜாமணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவரின் முதலுதவிக்கு பின் ராஜாமணியை அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாமணி உயிரிழந்துள்ளார். ராஜாமணிக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்னை இருந்திருக்கிறது. இதற்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் ஜெயிலில் இருந்தபோது அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.