கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், பரிசோதனை தொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கொரோனா அறிகுறி உள்ள நபர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து இணை நோயுடன் போராடுகிறவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
வெளிநாடு செல்கிற தனி நபர்கள், வெளிநாடுகளில் இருந்து  வருவோர் அனைவரும் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள்படி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் மருத்துவர் முடிவின்படி கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்படலாம். எந்தவொரு அவசர சிகிச்சையும் தாமதிக்கக்கூடாது. வேறு இடங்களுக்கும் அனுப்பக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள் உள்பட அறுவை சிகிச்சை அல்லாத நோய் தாக்கத்துடன் வருவோரிடம் அறிகுறிகள் இல்லாத போது கொரோனா பரிசோதனை தேவையில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை.
மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்வோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.