கழுதையை திருடியதாக மாணவர் தலைவர் கைது – சந்திரசேகர ராவை அவமதித்ததால் போலீஸ் நடவடிக்கை

ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் என்.எஸ்.யு.ஐ. மாணவர் அமைப்பின் தலைவராக இருப்பவர் பால்மூரி வெங்கட் நரசிங்கராவ்.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஹூசூர்பாத் சட்டசபை இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார்.
தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகரராவின் பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. அவரை அவமானப்படுத்தும் வகையில் மாணவர் அமைப்பு தலைவரான நரசிங்கராவ் நடந்துகொண்டார்.
கழுதை ஒன்றை திருடி அதன்மேல் கேக்கை வைத்து பிறந்தநாள் கொண்டாடி முதல்-மந்திரியை அவமானப்படுத்தி அவரும், என்.எஸ்.யு.ஐ. உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கழுதையின் மீது சந்திரசேகர ராவ் முகத்துடன் போஸ்டரையும் ஒட்டி இருந்தனர். இது சமூக வலைதளங்களிலும் வெளியானது.
கழுதையின் மீது சந்திரசேகர ராவ் முகத்துடன் போஸ்டர் ஒட்டி இருந்த காட்சி
இதைத் தொடர்ந்து மாணவர் அமைப்பு தலைவர் நரசிங்கராவை போலீசார் கைது செய்தனர். கரீம் நகரில் வைத்து ஜம்மிகுண்டா போலீசார் அவரை பிடித்தனர். கழுதையை திருடியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முதல்-மந்திரி சந்திர சேகரராவை அவமதித்ததால் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதே நேரத்தில் அந்த கழுதையை தான் திருடவில்லை என்றும் வாடகைக்கு எடுத்ததாகவும் மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பால்மூரி வெங்கட் நரசிங்க ராவ் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.