விரைவில் இரண்டாவது பாகம்: இளையராஜாவின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகம்!

`HOW TO NAME IT’ இசைத் தொகுப்பின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான HOW TO NAME IT இசைத் தொகுப்பு, இந்திய – மேற்கத்திய முதல் FUSION ஆல்பமாகும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரும் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவருமான தியாகராஜ சுவாமிகள் மற்றும் ஜெர்மன் இசை மேதை ஜே.எஸ்.பாக்கிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட HOW TO NAME IT ஆல்பம் 48 நிமிடங்கள் ஓடக்கூடியதாகும். HOW TO NAME IT, You cannot be free உள்ளிட்ட 10 இசைக்கோர்ப்புகள் அடங்கிய அந்த ஆல்பம் ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதோர் அனுபவத்தைத் தந்தது.

அந்த இசைத்தொகுப்பு ரசிகர்கள், இசை வல்லுனர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் இன்றளவும் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. HOW TO NAME IT இசைத்தொகுப்பின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்று இளையராஜா அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.