சர்வதேச விமான சேவை தொடங்குவது எப்போது? – வெளியான புது தகவல்!

இந்தியாவில், வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதன் காரணமாக, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், வெளி நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் வகையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டன. மேலும், அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் சர்வதேச விமானங்களை தவிர்த்து, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே, ஒமைக்ரான் கொரோனா பரவல் அதிகரித்ததால், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தரவை,
மத்திய அரசு
திரும்பப் பெற்றது. இதை அடுத்து இந்த மாதம் இறுதி வரை வரை சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளதாகத் தெரிகிறது. கொரோனா காலக் கட்டம் என்பதால், சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்குவதில், சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.