கர்நாடக மாநிலம் முழுவதும் இந்துத்துவ அமைப்பினர் எஸ்டிபிஐ, பிஎப்ஐ-க்கு தடை கோரி போராட்டம்

கர்நாடகாவில் எஸ்டிபிஐ, பிஎப்ஐ அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரி இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

கர்நாடக மாநிலம் ஷிமோகா வில் உள்ள சீகேஹ‌ட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப் பட்டார். இதன் பின்னணியில் முஸ்லிம் அமைப்பினர் இருப்பதாக மூத்த அமைச்சர் ஈஸ்வரப்பா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் எஸ்டிபிஐ, பிஎப்ஐ ஆகிய‌ அமைப்பினர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், இந்து ஜாகர்ண வேதிகே ஆகிய அமைப்பினர் ஹர்ஷா கொலையை கண்டித்து போராட்டம் நடத்தினர். பெங்களூரு, மைசூரு, தார்வாட், பெலகாவி, பாகல்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் எஸ்டிபிஐ, பிஎப்ஐ ஆகிய அமைப்புகளை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

பெங்களூரு டவுன் ஹால் எதிரில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி ஜி.கே.சீனிவாஸ், ‘‘எஸ்டிபிஐ,பிஎப்ஐ ஆகிய அமைப்புகள் சமூகத்தில் அமைதியை குலைக்கின்றன.

இந்துத்துவ அமைப்பினரை குறிவைத்து கொலை செய்கிறது. இந்த அமைப்புகளை கர்நாடக அரசுஉடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும் கொல்லப்பட்ட ஹர்ஷாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்”என வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.