அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் மண்டையை உடைப்பதாக மிரட்டல் : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்ட 17 பேரூராட்சிகளில், 16 பேரூராட்சிகள் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. 

திசையன்விளை பேரூராட்சியில் மட்டும் அதிமுக அதிக வார்டுகளில் கைப்பற்றியுள்ளது. திசையன்விளை பேரூராட்சியின் மொத்தமுள்ள 18 வார்டுகளில் ஒன்பது இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. தலா இரண்டு இடங்களில் திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

பாஜக, தேமுதிகவை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். சுயச்சை வேட்பாளர்கள் மூன்று இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனிடையே பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அதிமுக கூட்டணிக்கு திசையன்விளை பேரூராட்சி உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே, நேற்று பதவி ஏற்பு விழாவுக்கு வந்தால் அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் அனைவரின் மண்டையும் உடைப்போம் என்று மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்துகொண்டு பதவி ஏற்பு விழாவுக்கு வந்தனர். பதவியேற்புக்கு முன்பு வரை அவர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு தான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி, அமைதியான முறையில் மறைமுக தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வழக்கும் தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, “திசையன்விளை அதிமுக கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி, அமைதியான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.