ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது இன்னும் பூதாகரமாக வெடித்து வருகின்றது. உக்ரைன் மீது ஆக்ரோஷமாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவை, தாக்குதலை நிறுத்துமாறு பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.
ஆனால் இதனை எதையும் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது.
இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையால் கவலை!
பல ஆயிரம் பேர் பலி
இதனால் ஆயிரக்கணக்காக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், உக்ரைனின் இராணுவ வீரர்கள் பல நூறு பேரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்போது உண்மை முழுதும் தெரியவரும். இதேபோல ரஷ்ய வீரர்கள் பல ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பெரும் பின்னடைவு
இதற்கிடையில் தான் ரஷ்யாவுக்கு எதிராக பல நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல நாடுகளும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடை, வான் வெளி மீது தடை, நிறுவனங்கள் மீது வர்த்தக தடை, கச்சா எண்ணெய் இறக்குமதி தடை, பங்கு சந்தையில் தடை போன்ற பல தடைகளை விதித்து வருகின்றன. இதனால் ரஷ்யா பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவை விட்டும் வெளியேறும் பணக்காரர்கள்
இதற்கிடையில் ரஷ்யாவில் இருந்து வெளியேறும் வணிக விமான எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. ஆனால் அதன் பிறகு பிப்ரவரி 25 அன்று 60 தனியார் ஜெட் விமானங்கள் புறப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன. குறிப்பாக பிப்ரவரி 24 – பிப்ரவரி 27-க்கு இடையில் 300க்கும் மேற்பட்ட தனியார் ஜெட் விமானங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.
1000 விமானங்கள் வெளியேற்றம்
பிப்ரவரியில் மட்டும் சுமார் 1000 விமானங்கள் ரஷ்யாவினை விட்டு வெளியேறியுள்ளது. இந்த விமானங்கள் 52 நாடுகளில் உள்ள 135 இடங்களுக்கு பறந்துள்ளன.
இதில் 105 விமானங்கள் பிரான்ஸுக்கும், சுவிட்சர்லாந்துக்கு 104 விமானங்களும், லண்டனுக்கு 71 விமானங்களும் சென்றுள்ளன.
எங்கெங்கு?
சைப்ரஸ் மற்றும் மாலத்தீவுகள் போன்ற இடங்களுக்கும் மக்கள் அதிகம் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் துறைமுகங்கள், நிதி மையங்கள் மற்றும் நெருங்கிய அண்டை நாடுகள் ஆகியவை இந்த இலக்களில் முக்கிய இடம் பெற்றுள்ளன என Flightrader24 தெரிவித்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ், லாட்வியன் தலை நகர் ஜெனீவா, லண்டன், வியன்னா, துபாய், ஹெல்சிங்கி, சூரிச், செர்பிய தலை நகர் பெல்கிரேட் மற்றும் எஸ்தோனிய தலை நகர் தாலின் ஆகியவை மக்கள் விரும்பும் பகுதிகளாக உள்ளன.
காரணம் இது தான்
ரஷ்ய மக்களின் இந்த முடிவானது ரஷ்யாவின் மீதான தடைகள், நிறுவனங்கள் மீதான தடை உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் வந்துள்ளது. மேலும் ரஷ்யாவின் கடன் மதிப்பீடு குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் ரேட்டிங் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இது ரஷ்யாவின் கடனை செலுத்தும் திறன் மற்றும் ரஷ்ய பொருளாதாரத்தின் மீதான அச்சம் என பல காரணிகளால் வந்துள்ளன. இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தான் ரஷ்ய செல்வந்தர்கள் இத்தகைய முடிவுகளை எடுத்திருக்கலாம்.
Rich Russians leave the country amid multi sanctions
Rich Russians leave the country amid multi sanctions/ரஷ்யாவை காலி செய்யும் பணக்காரர்கள்.. சொந்த நாட்டு மக்களே வெளியேறும் அவலம்.. ஏன்!