மின் கட்டணம் பாக்கி: நாகையில் மத்திய அரசு நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிப்பு

நாகப்பட்டினம்: மின் கட்டணம் பாக்கித் தொகை செலுத்தாத காரணத்தால், நாகையில் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் கிளை அலுவலகம், நாகூர் பண்டகசாலை தெருவில் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆலையின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், சிபிசிஎல் நிறுவனம் கடந்த ஒரு வருடமாக மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளது.

இது குறித்து பலமுறை நாகை மாவட்ட மின்சார துறை அதிகாரிகள் அறிவிப்புகள் கொடுத்தும், அந்நிறுவனம் மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்தது. இந்நிலையில், சிபிசிஎல் அலுவலகம் இன்று காலை பூட்டிக் கிடந்ததால், மின்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், நாகூர் மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன அலுவலகத்தில் கேட்டபோது, மின்கட்டணம் விரைவில் செலுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.