இந்தோனேசியா, சீஷெல்ஸ்தீவில் குமரி மீனவர்கள் உட்பட 41 பேர் சிறைபிடிப்பு: அத்துமீறிய இலங்கை மீனவர்கள் கைது

நாகர்கோவில் / தூத்துக்குடி: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மீனவர்கள் உட்பட 41 பேர் இந்தோனேசியா மற்றும் சீஷெல்ஸ் தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மரியா ஜாசிந்தாஸ் (34), இம்மானுவேல் (29), முத்தப்பன் (48), சிஜின் (29), பிரவீன் (19), லிபின் (34), தோமன் (24), ஜாண் போஸ்கோ (48) ஆகிய 8 மீனவர்கள், அந்தமானைச் சேர்ந்த சுமதி பெய்டியா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், அந்தமான் தீவில் போர்ட் பிளேயர் துறைமுகத்தில் தங்கி ஆழ்கடலில் மீன்பிடித்து வந்தனர்.

கடந்த 7-ம் தேதி இந்தோனேசியா கடல் எல்லையை கடந்து ருஷா தீவில் மீன்பிடித்ததாக கூறி, அவர்கள் 8 பேரையும் இந்தோனேசிய கடலோர காவல் அதிகாரிகள் கைது செய்தனர்.

அதேபோல், கடந்த பிப்ரவரி 22-ம் தேதி கொச்சியில் இருந்து 3 விசைப்படகுகளில் கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை, சின்னத் துறையை சேர்ந்த மீனவர்கள் உட்பட 33 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். சூறைகாற்று காரணமாக திசைமாறி சென்றபோது இவர்களை, சீஷெல்ஸ் தீவில்உள்ள ராணுவத்தினர் சிறைபிடித்தனர். படகை ஓட்டி சென்ற 3 பேரை அங்குள்ள காவல் நிலையத்திலும், 30 பேரை அந்தந்த விசைப் படகுகளிலும் தங்க வைத்துள்ளனர்.

இலங்கை மீனவர்கள்

இதனிடையே, இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை கடலோர காவல் படையினர் நேற்று கைது செய்தனர்.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘ஐசிஜிஎஸ் வஜ்ரா’ என்ற ரோந்து கப்பல் நேற்று அதிகாலை கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் சந்தேகமான வகையில் மீன்பிடி படகில்சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை கடலோர காவல் படையினர் பார்த்தனர். அந்த படகை மடக்கிப் பிடித்தனர்.

இலங்கையைச் சேர்ந்த அந்தப் படகில் அந்நாட்டு மீனவர்கள் 5 பேர் இருந்தனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி, அவர்கள் 5 பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.

படகு மற்றும் மீனவர்களை கடலோர காவல் படையினர் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வருகின்றனர். அவர்கள் இன்று (மார்ச் 10) காலை 11 மணி அளவில் தூத்துக்குடி வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களின் பெயர் விவரம், இலங்கையில் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், எப்படி இந்திய எல்லைக்குள் வந்தனர் என்பன போன்ற விவரங்கள், அவர்கள் கரைக்கு வந்த பிறகே தெரியவரும் என்று கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.