பாலியல் வன்கொடுமைக்கு யார் காரணம்? – அமைச்சர் பதிலால் ஷாக் ஆன முதல்வர்!

பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாநில அமைச்சர் அளித்துள்ள பதில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான்
மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து மாநில நாடாளுமன்ற விவகார அமைச்சர்
சாந்தி தாரிவால்
பேசும் போது, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நாம் முதலிடத்தில் உள்ளோம். அதில், சந்தேகம் இல்லை. ஏன் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நாம் முன்னிலையில் உள்ளோம்? என கேள்வி எழுப்பி நிறுத்திய அவர், ஏனெனில், ஆண்கள் அதிகம் உள்ள மாநிலம் ராஜஸ்தான் என கூறினார். இதனால், சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது. அவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது.

இதுபற்றி ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா கூறும் போது, ராஜஸ்தான் பாலியல் வன்கொடுமையில் முதல் இடத்தில் உள்ளது என வெட்கமின்றி கூறியதுடன், பெண்களை புண்படுத்தியும் பேசியுள்ளார். ஆடவர்களின் கண்ணியமும் குறைத்து மதிப்பிடப்பட்டு உள்ளது. பிரியங்கா காந்தி நீங்கள் தற்போது இதற்கு என்ன சொல்கிறீர்கள், என்ன செய்ய போகிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவின் செய்தி தொடர்பு அதிகாரி ஷெசாத், தனது பேச்சுகளால் அமைச்சர், பாலியல் வன்கொடுமைகளை சட்டப்பூர்வமாக்கும் வகையில் பேசியுள்ளார். இது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சு வெறுப்பூட்டும் வகையில் உள்ளது. ஆச்சரியமும் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

அமைச்சர் சாந்தி தாரிவால் பேச்சு சர்ச்சையானதை அடுத்து தனது பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “வாய் தவறி அது போல் கூறி விட்டேன். அதற்காக நான் வருந்துகிறேன். நான் தனிப்பட்ட முறையில் பெண்களை மதிக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன். எனது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.