ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் யோகி ஆதித்யநாத்

லக்னோ:
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார். ஆட்சியமைக்க 202 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 255 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.கூட்டணி கட்சிகளான அப்னா தளம் (எஸ்) 12 தொகுதிகளிலும், நிஷாத் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், பாஜக தலைமையிலான புதிய அரசு அமைப்பதற்கு ஏதுவாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆனந்திபென் பட்டேலிடம் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு அமையும்வரை காபந்து முதல்வராக செயல்படும்படி யோகி ஆதித்யநாத்தை கேட்டுக்கொண்டார்.
ஆளுநர் மாளிகைக்கு  செல்வதற்கு முன்பாக, யோகி ஆதித்யநாத் தனது கடைசி அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அப்போது, தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தேர்தலில் வழிகாட்டுதல்களை வழங்கிய பிரதமர் மோடிக்கும் அவர் நன்றி தெரிவித்தார். 
மார்ச் 14 அல்லது 15ம் தேதியில் யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவில் பாஜகவின் மூத்த தலைவர்கள், பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.