‘‘தேசிய அளவில் காங்கிரஸுக்கு இனி மாற்று நாங்கள் தான்; கேஜ்ரிவால் பிரதமர் பதவி ஏற்பார்’’- ஆம் ஆத்மி நம்பிக்கை

புதுடெல்லி: பாஜகவுக்கு மாற்றாக இனி தேசிய அளவில் காங்கிரஸ் இடத்தை ஆம் ஆத்மி பெறும், கேஜ்ரிவால் ஒரு நாள் பிரதமராக பதவி ஏற்பார் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது.

ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் சன்னி ஒரு தொகுதியில் பின் தங்கியுள்ளார். அதுபோலவே மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவும் தனது தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் பின் தங்கியுள்ளார்.

சிரோண்மணி அகாலிதளம் 3-வது இடத்திலும், பாஜக கூட்டணி 4-வது இடத்திலும் உள்ளன. இந்த வெற்றியை நாடுமுழுவதும் உள்ள ஆம் ஆத்மி நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சத்தா கூறியதாவது:

ஆம் ஆத்மி ஒரு தேசிய சக்தியாக மாறுவதை நான் காண்கிறேன். ஆம் ஆத்மி காங்கிரஸுக்கு தேசிய அளவிலான இயற்கையான மாற்றாக இருக்கும்.

ஒரு கட்சியாக ஆம் ஆத்மி கட்சிக்கு இது ஒரு மகத்தான நாள். ஏனென்றால் இன்று நாங்கள் ஒரு தேசிய கட்சியாகிவிட்டோம். நாங்கள் இனி ஒரு மாநில கட்சி அல்ல. எல்லாம் வல்ல இறைவன் நம்மையும் அரவிந்த் கேஜ்ரிவாலையும் ஆசீர்வதிப்பார். அவர் ஒரு நாள் பிரதமராக இருந்துதேசத்தை வழிநடத்தும் நாள் வரும்.

2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆம் ஆத்மி கட்சியை விட இரண்டு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். இதுபோன்ற வெற்றியை பெற பாஜக அதிக நேரம் எடுத்து கொண்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.