5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி நாளை கூடி ஆலோசிக்கிறது.
அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிவாகை சூடியது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம் மற்றும் நடப்பு அரசியல் சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
5 மாநில தேர்தல் பொறுப்பாளர்களிடம், தோல்விக்கான காரணம் பற்றி அறிக்கை கேட்கப்படவும் வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு 2 ஆண்டுகளே உள்ள நிலையில், கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றியும் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் விரும்பினால், 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடத் தயார் என மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியநிலையில், அது குறித்தும் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.