ஹிஜாப் தடை தொடரும்: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.  ஆனால், அந்தக் கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.
 
அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியது.

இதையடுத்து பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து வரவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது. பள்ளி, கல்லூரிக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது.
 

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகளான ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கிருஷ்ண தீக்சித் முன்னிலையில் நடந்தது.
 

அப்போது, ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான அமர்வு விசாரிக்கும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், காஸி ஜெய்புனிஷா முகைதின் (பெண் நீதிபதி) முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து உத்தரவிட்டனர். ஹிஜாப் விவகாரம் குறித்த பல்வேறு மனுக்களை கர்நாடக ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை. அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே. எனவே ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும்  என கர்நாடக ஐகோர்ட் அதிரடியாக தீர்ப்பு அளித்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு அளித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி மேற்கொண்டு கூறுகையில், ” நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். மாநிலம், நாடு முன்னேற வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று மாணவர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். படிப்பதுதான் மாணவர்களின் அடிப்படை கடமை. எனவே இதையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் வெளியே வரவேண்டும். படித்து ஒற்றுமையாக இருங்கள்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், ஹிஜாப் தடைக்கு எதிராக முதலில் மனு தாக்கல் செய்த ஐவரில் இல்லாத மாணவி நிபா நாஸ் என்பவர் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய 59 இடங்களில் 11 கிலோ தங்கம், ரூ.84 லட்சம் ரொக்கம் பறிமுதல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.