சோனியாவின் விருப்பம்: ஒரே வரியில் ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து!

அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. மேற்கண்ட அனைத்து மாநிலங்களிலும்
காங்கிரஸ்
கட்சி படுதோல்வியைத் தழுவியது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில், தோல்விக்கான காரணங்கள் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விவாதித்தனர். அதன் தொடர்ச்சியாக, 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு அக்கட்சியின் தலைவர்
சோனியா காந்தி
கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து
நவ்ஜோத் சிங் சித்து
ராஜினாமா செய்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சித்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில் வேறு எந்த காரணத்தையும் குறிப்பிடாமல் “பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் குறிப்பிட்டு சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் விருப்பப்படி ராஜினாமா செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால், மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் நமீரக்பம் லோகன்சிங், கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர். சித்துவுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 4 மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.