"அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட்டிருந்தால், நீட் பயிற்சி மைய தேவை இருந்திருக்காது" – உயர் நீதிமன்றம்

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசின் ஆட்சிக்காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இடஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தலைமை நீதிபதி, ஏற்கெனவே தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதே என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இடஒதுக்கீட்டால் பயனடைந்தவர்களின் குடும்பத்தினர்தான் பயன் பெறுகின்றனர். 70 ஆண்டுகளாகியும் சமுதாயத்தில் பின்தங்கியவர்கள் பிந்தங்கியவர்களாகவே உள்ளனர் என்றும் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இதை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ”பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இடஒதுக்கீட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மொத்தம் உள்ள இடங்களில்தான் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நீட் தேர்வு தகுதி அடிப்படையில்தான் இந்த இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை என அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில்தான் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும். ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களால் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாது. எனவேதான், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது” எனத் தெரிவித்தார்.

உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ”அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது நியாயமானது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது. அதன் அடிப்படையில் பின்தங்கிய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டது” எனத் தெரிவித்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ”அரசுப் பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை கவனத்தில் கொள்ள தவறிவிட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதைப் போல, இலவச சீருடை, காலணி, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. மருத்துவ[ படிப்பில் இடஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் அரசு பாரபட்சமாக செயல்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த விசாரணையின்போது, பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதா என விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியிருந்தால், நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தேவை இருந்திருக்காது என கருத்து தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.