கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: 21 ஆயிரம் பேர் தேர்வை புறக்கணித்தனர்

பெங்களூரு :

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மார்ச் மாதம் 28-ந் தேதி தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.

இதற்கிடையே உடுப்பியில் உள்ள கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தொிவித்த இந்து மாணவர்கள் முஸ்லிம் மாணவிகளுக்கு போட்டியாக காவி துண்டு அணிந்து வந்தனர். இதனால் பள்ளி, கல்லூரிகளில் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய க் கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று ஐகோர்ட்டு கூறியது. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத வரும் முஸ்லிம் மாணவிகள் தேர்வு அறைக்கு ஹிஜாப் அணிந்து வர கூடாது என்றும், அவ்வாறு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை என்றும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. மேலும் ஹிஜாப்பை காரணம் காட்டி தேர்வை புறக்கணிப்பவர்களுக்கு மறுதேர்வு எழுத அனுமதி இல்லை என்றும் பள்ளிகல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் அறிவித்து இருந்தார்.

ஆனாலும் ஒரு சில மாணவிகள் எங்களுக்கு கல்வியை விட ஹிஜாப் தான் முக்கியம் என்று கூறி இருந்தனர். இதனால் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வு எழுதுவார்களா? கல்விக்காக ஹிஜாப்பை கைவிடுவார்களா? என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 73 ஆயிரத்து 846 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 732 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 21 ஆயிரத்து 110 பேர் மாணவிகள். 4 பேர் 3-ம் பாலினத்தவர்கள். 3 ஆயிரத்து 444 தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நடந்தது. நேற்று கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட முதல் மொழி தேர்வுகள் நடந்தது.

ஹிஜாப் விவகாரத்தாலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையிலும் தேர்வுகள் நடந்த கல்வி நிறுவனங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

தேர்வு எழுத வந்த முஸ்லிம் மாணவிகள் வீடுகளில் இருந்து ஹிஜாப் அணிந்து வந்தனர். ஆனால் தேர்வு மையங்களுக்குள் ஹிஜாப்பை அணிந்து செல்லவில்லை. மேலும் ஒரு சில பகுதிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு தேர்வு அறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வு மையத்திற்குள் செல்லாதது வருத்தம் தான். எங்கள் குடும்பத்திற்காக வீட்டில் இருந்து ஹிஜாப் அணிந்து வந்தோம். எங்கள் படிப்புக்காக தேர்வு அறைக்குள் ஹிஜாப் அணிந்து செல்லவில்லை. எங்களுக்கு ஹிஜாப், கல்வி இரண்டும் முக்கியம் தான். ஹிஜாப்புக்காக இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு படித்த படிப்பை வீணாக்கி விட முடியாது என்று கூறினர்.

ஒரு சில இடங்களில் ஹிஜாப்புடன் தேர்வு அறைக்குள் நுழைய முயன்ற மாணவிகளை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் ஹிஜாப்பை கழற்றிய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத 8 லட்சத்து 69 ஆயிரத்து 399 மாணவர்கள் தகுதியாகி இருந்தனர். இதில் 8 லட்சத்து 48 ஆயிரத்து 405 மாணவ-மாணவிகள் தேர்வுக்கு ஆஜராகினர். ஆனால் 20 ஆயிரத்து 994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 3,769 ஆகும்.

ஆனால் இந்த ஆண்டு தேர்வுக்கு ஆஜராகாத மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் முஸ்லிம் மாணவிகள் பலர் தேர்வுக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. முஸ்லிம் மாணவிகள் எத்தனை பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவில்லை. சுமார் 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதாத விவகாரம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.