’டிக் டாக்கில் பிரபலம்’ : இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதான விவசாயி தற்கொலை

கர்நாடக மாநிலம் தும்கூரில் இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்ட 45 வயதான விவசாயி 5 மாதத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகே சவுடனகுப்பே கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரண்ணா (45). விவசாயியான இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்ட மேகனா (25) என்ற இளம்பெண்ணை உறவினர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். சங்கரண்ணா வயதான தோற்றம் உடையவராக இருந்ததால் 60 வயது முதியவர், 25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.
image
மேலும், சங்கரண்ணா, மேகனா திருமணப் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. திருமணத்திற்கு பின்னர் சங்கரண்ணாவும்-மேகனாவும் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில், சங்கரண்ணா தற்போது தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது திருமணம் முடிந்த பின்னர் சங்கரண்ணாவும், மேகனாவும் சந்தோஷமாக வாழ்ந்துள்ளனர். மேகனா தற்போது 4 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேகனாவுக்கும், சங்கரண்ணாவின் தாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மேகனா, சங்கரண்ணாவிடம் மைசூரு அல்லது பெங்களூருவுக்கு சென்று தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று கூறியுள்ளார்.
image
ஆனால், தாயை பிரிந்து வரமாட்டேன் என்று சங்கரண்ணா கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக சங்கரண்ணா, மேகனா இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுபோல் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சங்கரண்ணா தற்கொலை செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியேறிய சங்கரண்ணா அக்கிமிதிபாளையா என்ற கிராமத்தில் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்ததும் அங்கு சென்ற மேகனாவும், சங்கரண்ணாவின் தாயும் சங்கரண்ணாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அங்கு வந்த போலீசார் சங்கரண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
இந்த நிலையில் சங்கரண்ணா சாவுக்கு மேகனாதான் காரணம் என்றும், சங்கரண்ணாவை மேகனா தற்கொலைக்கு தூண்டியதாகவும் ஹிலியூர்துர்கா காவல் நிலையத்தில் சங்கரண்ணாவின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். திருமணமான 5 மாதத்தில் சங்கரண்ணா தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.