கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு மாரடைப்பு, ரத்த உறைவு ஏற்படாமல் தடுக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா?: நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி

புதுடெல்லி: கொரோனா தொற்றில் இருந்து நோயாளிகள் மீண்ட பின்னரும் மாரடைப்பு மற்றும் ரத்த உறைவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு எதையும் மேற்கொண்டுள்ளதா? என திமுக எம்பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதன் விவரங்கள் வருமாறு:* கொரோனாவிற்குப் பிந்தைய பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசு இந்தியாவிலேயே ஏதேனும் ஆய்வுகள் கொண்டுள்ளதா அல்லது வெளிநாடுகளில் இருந்து வழங்கும் தரவுகளின் அடிப்படையில்தான் மருத்துவ முறைகள் பின்பற்றப்படுகின்றதா?* கொரோனாவில் இருந்து மீண்ட பலருக்கு திடீர் மாரடைப்பு மற்றும் ரத்த உறைவு பிரச்னை ஏற்படுவதாக நாடெங்கிலும் பல்வேறு புகார்கள் பதிவாகி உள்ளது. பிரபலங்கள் உட்பட பலரும் இதுபோன்ற பாதிப்புகளால் காலமாகினர் என செய்திகள் வந்துள்ளது. அது தொடர்பாக ஐசிஎம்ஆர் ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா?* கொரோனா மூன்றாம் அலை குறிப்பாக ஒமிக்ரான் பாதித்த சமயத்தில் மருத்துவமனைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஒன்றிய அமைச்சகம் அறிந்துள்ளனவா? இது குறித்து ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளதா?இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.