தமிழ்நாட்டில் சொத்து வரிகள் உயர்வு – முழு விவரம்

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் 15ஆவது நிதி ஆணையத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100 சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,801 சதுர அடிக்கு மேல் சொத்து வரி 150 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது.
இதேபோல, சென்னையோடு 2011-ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளில் 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்புகளுக்கு 25 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600 முதல் 1,200 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. ஆயிரத்து 801 சதுர அடிக்கு மேல் பரப்புள்ள குடியிருப்புகளுக்கான சொத்து வரி 100 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது.

சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் வணிகப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு 150 சதவிகிதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலையக் கட்டடங்களுக்கு 100 சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. சென்னையோடு 2011 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் வணிகப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கு 100 சதவிகிதமும், தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

இதையும் படிக்க: ’ரூ.21 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை’ – மத்திய நிதியமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.