மாணவர்களுடன் நடனம் கேரள கலெக்டர் அபாரம்| Dinamalar

பத்தனம்திட்டா:கேரளாவில், கல்லுாரி விழாவில் பங்கேற்ற பெண் கலெக்டர், மாணவர்களுடன் இணைந்து உற்சாக நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு, பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டராக இருப்பவர் திவ்யா. இவர், சமீபத்தில் அங்குள்ள ஒரு கல்லுாரியின் இளைஞர் விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். அங்கு, மாணவர்களுடன் இணைந்து, அவரும் அற்புதமாக நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார்.பயிற்சி ஏதும் இல்லாமல், பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவர்களுடன் அவர் சிறப்பாக நடனம் ஆடியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து, கலெக்டர் திவ்யா கூறியதாவது:எனக்கு இசை, நடனம் மிகவும் பிடித்தமான விஷயம். விழாவிற்கு என் குழந்தை உட்பட குடும்பத்தினர் வந்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து மாணவர்களின் நடனத்தை ரசித்துக்கொண்டு இருந்தேன்.அப்போது, தங்களுடன் ஆட வரும்படி மாணவர்கள் அழைத்தனர். ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடனம் ஆட நினைத்தேன். ஆனால், மாணவர்களின் உற்சாகம் என்னையும் தொற்றி நடனத்தில் ஐக்கியமாகும்படி செய்துவிட்டது. இது, என் கல்லுாரி விழாக்களை மீண்டும் நினைவில் கொண்டுவர உதவியது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.