புதுடெல்லி:
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான், அதிபருக்கு பரிந்துரைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரையில் பிரதமர் பதவியில் இம்ரான் கான் நீடிப்பார் என அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்திருந்தார்.
இடைக்கால பிரதமருக்கான பெயர்களை பரிந்துரை செய்யும்படி பிரதமர் இம்ரான்கான் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு அதிபர் கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவின் பெயரை இம்ரான் கான் பரிந்துரை செய்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.