கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – சசிகலாவிடம் ஐந்தரை மணி நேரம் தனிப்படை போலீஸார் விசாரணை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸார் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை தொடர்கிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016-ல் காலமானார். அவருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்தனர். இதை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜிடம் விசாரணை நடத்தவிருந்த நிலையில், அவர் சாலை விபத்தில் மரணமடைந்தார். இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

கோடநாடு வழக்கில் தொடர்புடைய சயான் என்பவரும் குடும்பத்துடன் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி, மகள் உயிரிழந்தனர். தொடர்ந்து கோடநாடு பங்களாவில் கணிணி ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமாரும் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடந்த விபத்து, கொலை, தற்கொலை சம்பவங்களால் கோடநாடு வழக்கில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கோடநாடு வழக்கு மீண்டும் தீவிரமடைந்தது. மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட போலீஸார் அடங்கிய தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினரும், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவருமான விவேக் ஜெயராமன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன், உறவினர் மகன், நேர்முக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி, ஐஜி சுதாகர் தலைமையில் நீலகிரி எஸ்.பி ஆசிஸ்ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன், பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் என 8 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் நேற்று காலை 10.55 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள சசிகலா வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சசிகலாவின் வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் உடனிருந்தார்.

நீங்கள் சிறையில் இருந்த நேரத்தில் கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. அதுபற்றி எப்போது உங்களுக்கு தெரியவந்தது? கொலை செய்யப்பட்ட காவலாளி ஓம்பகதூர், தற்கொலை செய்துகொண்ட கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் ஆகியோரை உங்களுக்கு தெரியுமா? இந்த கொலை தொடர்பாக உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா? இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை நீங்கள் பார்த்தது உண்டா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

கோடநாடு எஸ்டேட் வாங்கியது எப்படி, அங்கு எத்தனை பேர் வேலை பார்க்கின்றனர், எந்தெந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது என்பன போன்ற கேள்விகளையும் கேட்டுள்ளனர். மேலும், கோடநாடு எஸ்டேட்டில் காணாமல் போனதாக கூறப்படும் பத்திரங்கள், ஆவணங்கள், ஆபரணங்கள் குறித்தும் கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளைபோன சில ஆவணங்கள் சென்னை தி.நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிக்கியது எப்படி என்றும் கேட்டுள்ளனர்.

முக்கியமான சில கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பதில்கள் வீடியோவிலும் எழுத்து மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலை 10.55 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5.20 மணிவரை நீடித்தது. மதிய உணவு இடைவேளை தவிர்த்து சுமார் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடந்தது. சசிகலாவிடம் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்த உள்ளனர்.

செய்தியாளர்களிடம் சசிகலா கூறும்போது, ‘‘நாளையும் (இன்று) விசாரணை நடக்க உள்ளதால் விசாரணை முடிந்த பிறகு அதுகுறித்து பேசுகிறேன்’’ என்றார். விசாரணையின்போது சசிகலா வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.