நடிகர் சூரி தொடர்ந்த மோசடி வழக்கு: ஓய்வு டிஜிபி, தயாரிப்பாளரை நேரில் விசாரிக்க முடிவு

நடிகர் சூரி கொடுத்த மோசடி புகாரில் ஓய்வு பெற்ற டிஜிபி மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு. சம்மன் கொடுத்து நேரில் விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாதகாலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது.

image

இதையடுத்து இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடிகர் சூரி 3 முறை இந்த வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட 110 கேள்விகளுக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு வாஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபி-யான ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது 406- நம்பிக்கை மோசடி, 420- பண மோசடி ஆகிய பிரிவுகளின் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு சம்மன் கொடுக்க உள்ளனர்.

image

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 பேரையும் நேரில் வரவழைத்து தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.