பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் முறியடிப்பு – ஜம்மு போலீசார் பேட்டி

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் மல்வஹ் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. இதில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 3 பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
அதேபோல், ஜம்முவின் சஞ்வான் பகுதியில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பயணித்த பஸ்சை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
விசாரணையில், தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இந்த மோதலின்போது பாதுகாப்புபடை வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார் என ஜம்மு ஏடிஜிபி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.