ஆதரவற்றவர்களுக்கு உதவி வரும் பஹ்ரைன் நன்கொடையாளரை ஆச்சரியப்படுத்திய டிவி நிகழ்ச்சி

கெய்ரோ: பஹ்ரைனைச் சேர்ந்த காலில் அல் டேலாமி கட்டிடக்கலை நிபுணர். ஆதரவற்றவர்களுக்கு உதவி வரும் இவரது கார் போக்குவரத்து சிக்னலில் நிற்கிறது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தார். உடனடியாக அவரது கார் முன்பு தோன்றிய சிலர், ‘கவனியுங்கள் உங்கள் முன்பு ஒரு ஹீரோ உள்ளார்’ என அரபு மொழியில் எழுதப்பட்ட பதாகைகளை காண்பிக்கின்றனர். ‘காலில் அல் டேலாமி, உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’ எனவும் எழுதப்பட்டிருந்தது.

மேலும் அப்பகுதியில் நின்றிருந்த லாரியில் ‘காலில் அல் டேலாமி ஹீரோ’ என பெரிதாக எழுதப்பட்டிருந்தது. கார் ஜன்னல் ஓரம் நின்றிருந்தவர்கள் டேலாமியின் புகைப்படத்தைக் காண்பித்தனர். ‘நீங்கள் மிகச்சிறந்த மனிதர்’ என கோஷமிட்டனர். இதை எல்லாம் பார்த்த அவர் ஆச்சரியப்படுகிறார். காரிலிருந்து கீழே இறங்கிய அவர், “உங்கள் பாராட்டைப் பெற நான் தகுதியானவன் அல்ல. இதற்கு அல்லா தான் காரணம்” என்றார்.

பஹ்ரைன் தொலைக்காட்சியில், ரம்ஜான் நோன்பை முன்னிட்டு சமூகத்துக்கு சேவை செய்பவர்களை கொண்டாடும் வகையில் ‘நீங்கள் மிகச்சிறந்த மனிதர்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பானது.

இந்நிகழ்ச்சிக்காக அல் டேலாமியும் அழைக்கப்பட்டிருந்தார். புதியகாரை சாலையில் ஓட்டி பார்க்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை கேட்டுக்கொண்டனர். அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி தான் போக்குவரத்து சிக்னலில் நின்ற அவரது காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் பாராட்டு மழை பொழிந்தனர். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், அவரது முகப்பாவங்களை பதிவு செய்வதற்காக காருக்குள் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பானது. ஆனால் இதுபற்றி அவருக்கு முன்கூட்டியே தெரியாது. பின்னர் இதை உணர்ந்த அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுகிறார்.

அல் டேலாமி தனது அறக்கட்டளை மூலம் ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதனால் ஆதரவற்றவர்களின் தந்தை என அவர் அழைக்கப்படுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.