சேலம், ஆத்தூர் தளவாய்ப்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 25). இவர் கடந்த 2018-ம் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் தாயாரை அரிவாளால் தாக்கிவிட்டு, ஜாதி பெயரை கூறி, சிறுமியின் தலையை அறுத்து தெருவில் வீசினார்.
தினேஷ்குமாரின் மனைவி மற்றும் சகோதரர் அவரை ஆத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கு நீதிபதி முருகானந்தம் முன் விசாரணைக்கு வந்த போது, வழங்கப்பட்ட தீர்ப்பில் தினேஷ்குமார் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. மேலும், தீர்ப்புகளின் விபரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சிறையிலிருந்து காவல்துறையினரால் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட தினேஷ்குமார் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
பின்னர், தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதன் பிறகு, தினேஷ்குமாரை பாதுகாப்புடன் காவல்துறையினர் வேனில் ஏற்றி சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.