’ஜாதிக்கொரு சுடுகாடு வைத்துக்கொள்வது தான் திராவிட மாடலா?’ – எல்.முருகன் கேள்வி

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் மின்வெட்டு உள்ளது என கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளத்தில், மத்திய அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகி இல்ல விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், 2014 க்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் மின் வெட்டு உள்ளது. பொருளாதாரத்தில் கீழ்நிலையில் சென்றுள்ளது தமிழக அரசு. அதனை மக்கள் தலையில் சுமத்திவிட்டு, மத்திய அரசு மீது பழிபோடுவதை ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
image
தமிழகத்தில் திராவிட மாடல் என்பது என்ன என்று திமுக விளக்கவேண்டும். 50, 60 ஆண்டுகளாக திராவிட மாடலில்தான் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் இன்றும் பல கோவில்களில் பட்டியலின மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. பல கிராமங்களில் பட்டியலின மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. இது தான் திராவிட மாடலா? ஜாதிக்கொரு சுடுகாடு வைத்துக்கொள்வது தான் திராவிட மாடலா? உண்மையான சமூக நீதியின் ஹீரோ பிரதமர் நரேந்திர மோடி தான். வெட்கம் இல்லாமல் எதை திராவிட மாடல் என்று திமுக கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மீனவர் படுகொலை நடைபெற்றது. 600க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒரு துப்பாக்கி சூடு கூட நடக்கவில்லை. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்தியுள்ளது மத்திய அரசு எனக் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.