அஸ்வின் அதிரடி : சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான்

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசனில் இன்று நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்களில் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டெவோன் கான்வே உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். டிரென்ட் போல்ட் வீசிய 6-வது ஓவரில் மொயின் அலி ஒரு சிக்சர், 5 பவுண்டரி அடித்தார் . அந்த ஒரே ஓவரில் மொயின் அலி 26 ரன்கள் குவித்தார்.

16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கான்வே ஆட்டமிழந்தார். மொயின் அலி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் ராயுடு, ஜெகதீசன் அனைவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் தோனி – மொயின் அலி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 19-வது ஓவரில் தோனி 26 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் அணி தரப்பில் சஹால், மெக்காய் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகியது.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினார்கள். அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த கேப்டன் சாம்சன் 15 ரன்களிலும், படிக்கல் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் ஒரு முனையில் தொடர்ந்து ஆடிவந்த ஜெய்ஸ்வால் 39 பந்துகளில் அரைசதம் கடந்தார். சோலாங்கி வீசிய 15-வது ஓவரில் ஜெய்ஸ்வால் பதிரனா-விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் ராஜஸ்தான் அணி 15-வது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து இருந்தது. கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் – ஹெட்மயர் ஜோடி சேர்ந்தனர். ஹெட்மயர் 6 ரன்களில் நடையை கட்டினார், இருப்பினும் ஒரு பக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுண்டரி, சிக்சர்களாக அடித்து அதிரடி காட்டினார்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட 2 பந்து மீதம் இருக்க ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அஸ்வின் 23 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அத்துடன் பிளே ஆப் சுற்றுக்கும் ராஜஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. புள்ளிபட்டியலில் தற்போது ராஜஸ்தான் அணி 2-வது இடத்தில் உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.