உ.பி: ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து தீ விபத்து… 8 பேர் பலி; 15 பேர் படுகாயம்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்திலுள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தோலானா பகுதியில் அமைத்துள்ள இந்த ரசாயன தொழிற்சாலையில், கொதிகலன் வெடித்ததால் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், 8 பேர் பலியானது மட்டுமல்லாமல் இன்னும் 15 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலையில் தீ விபத்து, 8 பேர் பலி

இதுகுறித்து உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப்பணி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறும், பாதிக்கப்பட்டோர் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என ட்வீட் செய்துள்ளது.

மேலும், உத்தரப்பிரதேச அமைச்சர் நந்த கோபால் குப்தா, “இறந்தவர்களின் ஆத்மாக்களுக்குச் சாந்தியையும், அவரின் குடும்பத்தாருக்கு இழப்பைத் தாங்கும் சக்தியையும் இறைவன் தருவானாக. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என ட்வீட் செய்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.