சென்னையில், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்த கேரள இளைஞர்; சதி வேலையா? என போலீசார் விசாரணை

BSNL network hacked by Kerala youth in Chennai: சென்னையில், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்து தனியாக டெலிபோன் எக்ஸ்சென்ஞ் நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னையில் கடந்த 15 நாட்களில் 72 லேண்ட்லைன் இணைப்புகளில் இருந்து சுமார் 10,000 – 15,000 அழைப்புகள் என அதிகப்படியான அழைப்புகள் செய்யப்பட்டுள்ளதை பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

சென்னை கானத்தூர் பகுதியில் நடத்தப்பட்டச் சோதனையில், ஓரு வீட்டில் ஏழு சிம் பெட்டிகளை காவல் துறையினர் மீட்டுள்ளனர். ஒவ்வொரு பெட்டியும் 32 சிம் கார்டுகளை செயலாக்கும் திறன் கொண்டது என தெரியவந்தது. அதனை தொடர்ந்த நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வாடகை வீட்டில் வசிக்கும் நபர் சட்டவிரோதமாக டவரில் இருந்து சிக்னலை ஹாக் செய்து டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர், அந்த வாடகை வீட்டில் வசித்து வந்த நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 35 வயதான நௌஃபல் என்பதும், அவர் கானத்தூர் நயினார் குப்பம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நௌஃபல், பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களை ஏமாற்றி அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியுள்ளார். இதற்காக 224 வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக சிம் கார்டுகளை வாங்கியுள்ளார், அதனை பிரத்யேக கருவிகளில் இணைத்து, வாடிக்கையாளர்களுக்கு நெட்வொர்க்கை உருவாக்கி அவர்களுக்கு ஒரு பிரத்யேக மொபைல் எண்ணை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நெட்வொர்க்கில் பதிவு செய்து வழங்கியுள்ளார். அவர் பதிவு செய்த நம்பர்கள் அனைத்தும் போலி ஆதார் அட்டை மற்றும் முகவரி போலிச் சான்றிதழை பயன்படுத்தி வாங்கப்பட்டது தெரிய வந்தது.

இதன் மூலம் பேசுபவர்கள் யார் யாரிடம் பேசுகிறார்கள் என்ற விவரம் செல்போன் நெட்வொர்க் நிறுவனத்தில் பதிவாகாதபடி நுணுக்கமாக வேலை செய்துள்ளார். மேலும் வெளி நாடுகளில் வசிப்பவர்கள் ஒரு பிரத்யேக கருவியைப் பயன்படுத்தி வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) அழைப்புகளைச் செய்கிறார்கள்.

இதன் மூலம் அந்த வாடகை வீட்டிலேயே சிறிய அளவிலான டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் உருவாக்கி அதன் மூலம் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி பயன்படுத்தி வந்துள்ளார். இப்படி ரூட்டரை வைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நெட்வெர்க்கை திருடி பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: 44 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தாம்பரம், கோவைக்கு புதிய கமிஷனர்கள்

இதனையடுத்து அவரிடம் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொலைதொடர்பு ரகசியத்தை பாதுகாக்க இதுபோன்ற நாச வேலைகளில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, எதற்காக இப்படி ஒரு மோசடி செயலில் ஈடுபட்டார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான நௌஃபல் மீது வழக்கு பதிவு செய்து கானத்தூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நெட்வொர்க்கை கேரளாவில் இருந்து இயக்கி வரும் முக்கிய குற்றவாளியான அனீஸ் உள்ளிட்ட இருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.