இஸ்லாமிய கூட்டமைப்புக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் அண்மையில் விவாதம் நடைபெற்றது. அதில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா பங்கேற்றார். அப்போது அவர், முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், முகமது நபி குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. இந்த சர்ச்சை விவகாரத்தில் அரபு நாடுளுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அரபு நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து, பாஜகவின் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

அவர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். “எந்த ஒரு மதத்தையும், அதன் கடவுளரையும் அவமதிப்பதை பாஜக வண்மையாக கண்டிக்கிறது. பிற மதத்தை நிந்தனை செய்யும் எந்த ஒரு சித்தாந்தத்தையும் பாஜக ஊக்குவிக்காது” என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, பாஜக நிர்வாகிகளின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்லாமிய ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், இஸ்லாமிய கூட்டமைப்புக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. குறுகிய எண்ணம் கொண்ட கருத்தை இந்தியா திட்டவட்டமாக எதிர்ப்பதாகவும், சம்மந்தப்பட்ட தனி நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்திய அரசு எல்லா மதங்கள் மீதும் உச்சபட்ச மரியாதை கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.