இந்தியாவில் மீண்டும் கட்டுப்பாடுகள்? – மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் கடிதம்!

கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உட்பட நாடு முழுவதும், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலங்களின் தலைநகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று, கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷண் எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளதாவது:

வரும் மாதங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள், யாத்திரைகள் நடைபெற உள்ளன. அங்கு கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் வரக்கூடிய நாட்களில் பரிசோதனை, கண்காணிப்பு, தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

திருவிழா மற்றும் பாத யாத்திரைகள் நடைபெறும் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு, ஆர்.டி.பி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கையை எடுக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் காற்றோட்ட வசதி உள்ள இடங்களாக இருக்க வேண்டும். மருத்துவ வசதி, மருந்துகள் இருப்பு, ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.