மூணாறு : கேரளாவின் மூணாறு போலீஸ் ஸ்டேஷனில் முக்கிய தகவல்களை திருடி பயங்கரவாத அமைப்புகளுக்கு கொடுத்ததாக, மூன்று போலீஸ்காரர்கள் வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மூணாறு போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்யூட்டரில் பாதுகாக்கப்பட்ட முக்கிய தகவல்களை திருடி, பயங்கரவாத அமைப்புகளிடம் கொடுத்ததாக போலீஸ்காரர்கள் அலியார், ரியாஸ், அப்துல்சமத் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இது குறித்து சிறப்பு பிரிவு போலீசார் உட்பட ரகசிய பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதவாத பயங்கரவாத அமைப்புகளுக்கு தகவல்கள் கைமாறியதாக தெரியவந்தது. இதையடுத்து, மூன்று போலீசாரின் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.இந்நிலையில், புகாரில் சிக்கிய போலீஸ்காரர் அலியார், முல்லை பெரியாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது அலியார், ரியாஸ் ஆகியோர் எர்ணாகுளம் மாவட்டத்திற்கும், அப்துல்சமத் கோட்டயம் மாவட்டத்திற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, கோழிக்கோடு மாவட்டம் வடக்கரா போலீஸ் ஸ்டேஷனில், காவலில் இருந்த 47 வயது நபர் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவரை போலீசார் அடித்துக் கொன்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, எஸ்.ஐ., உட்பட மூன்று போலீசார், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement