தாக்குதலில் இருந்து தப்பி வெளிநாட்டுக்கு சென்ற தமிழர் ஒருவர் பெரும் கோடீஸ்வரராக மாறிய நிலையில் கோவில் ஒன்றுக்கு ரூ.10 கோடி காணிக்கை கொடுத்ததன் நெகிழ்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
ஓமனில் வசிக்கும் பெரியசாமி என்ற தமிழர், கடந்த 2008 -ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது மும்பையில் இருந்தார்.
ஓமன் வேலைக்காக மும்பையில் இருந்து விமானம் ஏறுவதற்காக வந்திருந்தார். மும்பையில் இருந்து விமானம் ஏறுவதற்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலால் இரண்டு வாரம் விமானப் போக்குவரத்து தடைப்பட்டு மும்பையில் சிக்கிக்கொண்டார் பெரியசாமி.
மும்பையில் இருந்து பாதுகாப்பாகச் செல்ல உதவும்படி மும்பை மலாலட்சுமி அம்மனை வேண்டிக்கொண்டார்.
பின்னர் இரு வாரம் கழித்து மும்பையில் இருந்து ஓமனுக்கு பறந்தார்.
அங்கு மாதம் ரூ. 12000 சம்பளத்திற்கு வேலைக்கு சென்ற பெரியசாமியின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.1400 கோடியாகும். ஓமனில் சில ஆண்டுகள் மட்டும் வேலை செய்த பெரியசாமி சிறிய அளவில் மின்சார டிரான்ஸ்பார்மர் தொழிலைத் தொடங்கினார்.
அது விரிவடைந்ததன் காரணமாக இன்று மிகப்பெரிய கோடீஸ்வர தொழிலதிபராக உருவாகியுள்ளார்.
இந்த அளவுக்குத் தன்னை உயர்த்தியதற்காக அடிக்கடி மும்பை மகாலட்சுமி கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அப்படி வந்து செல்லும் போதுதான் கோவிலில் அம்மன் இருக்கும் அறையில் கடல் உப்புக்காற்றால் துருப்பிடிக்காமல் இருப்பதற்காக தங்கம் மற்றும் சுத்தமாக காப்பர் பிளேட் பொருத்தும் எண்ணம் உருவானது.
இதற்காக ரூ. 10 கோடி நன்கொடை வழங்கியுள்ளார் பெரியசாமி.
இது குறித்து மகாலட்சுமி கோவில் அறக்கட்டளையின் பொது மேலாளர் சரத் சந்திரா பத்யி கூறுகையில், ஏற்கெனவே இருப்பது போன்ற அமைப்பில் கர்ப்ப கிரக அறையை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஏற்கெனவே இருப்பதில் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் கவனத்துடன் செய்து முடிக்கப்படும். இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.25 கோடி பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டால் முடிவடைய ஒரு வருடம் ஆகும்.
இதில் ஒரே மாதிரியான தங்கம் படிவதை உறுதி செய்ய முயற்சிப்போம் என கூறியுள்ளார்.