அத்தியாவசிய பொருட்களை புகையிரதம் மூலம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் எடுத்துவர நடவடிக்கை

யாழ் மாவட்டத்துக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை கொழும்பிலிருந்து எடுத்து வரவும், யாழ்ப்பாணத்திலிருந்து உணவு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் தேவையான புகையிரத சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ் வணிகர் கழகம் என்னிடம் விடுத்த கோரிக்கைக்கமைய,
கடந்த 30.06.2022 அன்று என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்துக்கு அமைவாக, திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இலங்கை புகையிரத துறையிடம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யாழ் – கொழும்புக்கிடையிலான புகையிரத சேவையை பயன்படுத்த உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கடிதம் மூலமாக கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யாழ் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் இதுவரைகாலமும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக ஏராளமான லொறிகளை பயன்படுத்தினர்.

துரதிஷ்டவசமாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் யாழ் மாவட்ட வர்த்தகர்கள் லொறிகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

தற்போதைய நெருக்கடி நிலையானது மேலும் மோசமடைந்து, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்களுக்கு போக்குவரத்துக்காக சுமார் பத்து அல்லது பன்னிரெண்டு புகையிரத வண்டிகள் தேவைப்படுவதால் அதற்கான செலவை அவர்கள் செலுத்த தயாராக உள்ளனர்.

எனவே இப்பிரச்சினையின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பொருட்களை புகையிரதம் மூலம் சலுகை விலையில் கொண்டு செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகவும் தாம் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.