அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் பண மோசடி தடுப்பு சட்டம் செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த பணமோசடி தடுப்பு சட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சொத்துகளை பறிமுதல் செய்தல், சோதனை நடத்துவது உள்ளிட்ட அதன் முக்கிய அதிகாரங்களையும் உறுதிபடுத்தி உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஒன்றிய அரசால், ‘பண மோசடி தடுப்பு சட்டம்’ இயற்றப்பட்டு, 2005ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டில் செயயப்பட்ட சட்டத் திருத்தத்தில், அமலாக்கத் துறைக்கு சொத்துகளை முடக்குதல் உள்ளிட்ட பல்வேறு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதை எதிர்த்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, கார்த்தி சிதம்பரம் உட்பட சுமார் 240க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த சட்டங்களை ரத்து செய்யக் கூடாது என்று அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது: சட்ட விரோத பணப் பரிமாற்ற குற்றம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை, பண மோசடியோடு மட்டும் நின்று விடாது. அது பரந்த வரம்பை கொண்டதாகும். குற்றம் சாட்டப்படுபவர்கள் ஒரு சொத்தை முறைகேடாக பெறுவது, பண மோசடி சட்டப்பிரிவு 3ன் கீழ் சட்ட விரோதமாக பெறப்பட்ட ஆதாயத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்களை தண்டிக்க இதுபோன்ற சட்டங்கள் வேண்டும். அதனால், அரசியலைமைப்பு சட்டப்பிரிவு 5ன்படி, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு தட்டம் செல்லத்தக்க ஒன்றாகும். அதனால், அமலாக்கத் துறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் நிராகரிக்கிறது. அமலாக்கத் துறை பதிவு செய்யும் வழக்கில் பின்பற்றப்படும், ‘இசிஐஆர்’ என்பதை (அமலாக்கத்துறை வழக்கு தகவல் அறிக்கை) போலீசார் பதிவு செய்யும் எப்ஐஆருடன் ஒப்பிட முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இந்த இசிஐஆரை வழங்க வேண்டிய கட்டாயமில்லை. கைது செய்வதற்கான காரணங்களை மட்டும் அமலாக்கத் துறை தெரிவித்தால்் போதும். இந்த சட்டத்திற்கு எதிரான வாதங்கள் அனைத்தும் ஆதாரமற்றது. இந்த வழக்கு இன்றுடன் முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.உறுதி செய்யப்பட்ட சட்டங்கள்:உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டு உள்ள பல்வேறு அதிகாரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:* சொத்துக்களை முடக்க அதிகாரம் வழங்கும் பிரிவு 8(4).* வாகனங்கள், பொருட்களை பறிமுதல் செய்யவும், லாக்கரை உடைத்து ஆவணங்களை கைப்பற்றவும் அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 17(1), 18(1).* காரணம் கூறாமல் கைது செய்ய அதிகாரத்தை வழங்கும் சட்டப்பிரிவு 19. * சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் குற்றங்கள் என வகைப்படுத்தும் சட்டப்பிரிவு-44. * ஜாமீன் வழங்க மறுக்கும் சட்டப் பிரிவு-45.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.