ஈரானில் நிலச்சரிவு: 4 பேர் உயிரிழப்பு| Dinamalar

டெஹ்ரான்:ஈரானில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆசிய நாடான ஈரானின் தலைநகர் டெஹ்ரானில், இமாம்சாதே தாவூத் மத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால், திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது; வீடுகள், மரங்கள் பெருமளவு சேதமடைந்தன.
இந்நிலையில் கன மழை காரணமாக, இங்குள்ள அல்போர்ஸ் மலையின் அடிவாரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நான்கு பேர் உயிரிழந்தனர்; ஒன்பது பேர் பலத்த காயமடைந்தனர்.இச்சம்பவம் குறித்து, மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். பலர் சேற்றில் புதைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
இமாம்சாதே வழிபாட்டு தலம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.இன்றும் பலத்த மழை பெய்யும் என்பதால், மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஈரானின் பார்ஸ் மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், 21 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.