பூ டெலிவரி செய்வதன் மூலம் 8 கோடி வருமானமா? உண்மையா? இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். ஆனால் இது உண்மை தான். பெங்களூரினை சேர்ந்த இரு சகோதரிகள் தான் இந்த பூ டெலிவரி செய்யும் வணிகத்தினை வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவெனில், இந்த வணிக சகோதரிகளின் தாயார் செய்த, சிறிய புகார் தான் இந்த வணிகம் செய்ய தூண்டியதாகவும், அதனை பற்றி சிந்திக்க வைத்ததாகவும் கூறுகின்றனர். இதன் எதிரொலியாகவே ஹூவு தொடங்கியதாகவும் கூறுகின்றனர்.
ஹூவு என்றால் கன்னடத்தில் மலர்கள் என்று அர்த்தம்.
சர்வதேச அரசியலில் அசத்தும் இந்தியர்கள்.. அட இத்தனை பேரா..?
பூ டெலிவரி வணிகம்
சகோதரிகள் யசோதா கருதூரி மற்றும் ரியா கருதூரி, பூ சந்தையில் நிலவி வரும் இடைவெளியினை ஆராய்ந்து, அதனை தங்கள் வணிகமாக மாற்றியுள்ளனர். இங்கு ரோஜாக்கள் முதல் தாமரை வரை யாருக்கு என்ன வேண்டுமோ அதனை டெலிவரி செய்தும் வருகின்றனர்.
வழக்கமாக நம்மூரில் பால், பேப்பர், காய்கறி, கீரை என வீடு தேடி வந்து டெலிவரி செய்வார்கள். ஏன் இன்றைய காலகட்டத்தில் இறைச்சிகளை கூட சில ஸ்டார்ட் அப்கள் டெலிவரி செய்யத் தொடங்கிவிட்டன.
ஹூவு ஸ்டார்ட் அப்
அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த சகோதரிகளின் பூ டெலிவரி திட்டமானது புதுமையான ஒன்று. இது பெங்களுரினை தலைமையிடமாக கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இதன் ஆரம்ப முதலீடு 10 லட்சம் ரூபாய் என்ற லெவலில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று அதன் டர்ன் ஓவர் 8 கோடி ரூபாய் ஆகும்.
சந்தாதாரர்கள்
2019ல் தொடங்கிய இந்த வணிகம் மூலம், பழமையான மலர்களை கூட சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர் இந்த சகோதரிகள். இதன் மூலம் தங்களது ஹூவு தளம் மூலம் ரெகுலர் சந்தாதாரர்களை இணைத்து, அவர்களுக்கு மலர்களை சப்ளை செய்து வருகின்றனர்.
பாரம்பரியமாக பூ வணிகம் செய்து வரும் இந்த குடும்பத்தில் இது பெரிய விஷயமாக இல்லாவிட்டாலும், இவர்களின் புதுமையான ஐடியாவே இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ரோஜாத் தோட்டம்
இந்த சகோதரிகளின் தந்தை ராம் கருத்தூரிக்கு கென்யா, எத்தியோப்பியா மற்றும் இந்தியாவில் ரோஜா தோட்டங்கள் உண்டாம். 90களில் அவரின் பண்னை கென்யாவின் மிகப்பெரிய ரோஜா பண்ணையாக அங்கீகரிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக நாங்கள் செய்து வரும் பூ வணிகம் மூலம் நல்ல வளர்ச்சியினை கொடுத்து வருவதை பார்த்து நாங்கள் வளர்ந்துள்ளோம் என கூறுகின்றனர்.
இந்தியர்களுக்கு ஆர்வமில்லை
உலகம் முழுக்க பூக்களின் தேவை எந்தளவுக்கு உள்ளது என்பதை தெரிந்துகொண்டோம். எனினும் இந்தியர்களுக்கு அந்தளவுக்கு ஆர்வமில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் பூக்களின் தேவை உண்டு. எனினும் இங்கு ஆர்வம் குறைவு என்று கூறும் சகோதரிகள், இதன் பிறகு தான் எங்களின் கவனத்தை திசை திருப்பினோம்.
கல்வி தகுதி
பெங்களூரில் பிறந்து வளர்ந்த இந்த சகோதரிகள், எத்தியோப்பியாவில் பள்ளிப்படிப்பினை படித்துள்ளனர். இதில் யசோதா செயிண்ட் லூயிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்ததில் முதுகலை பட்டத்தினை படித்துள்ளார். இந்தியாவில் பூ தொடர்பான வணிகமானது பல வருடங்களாக பெரியளவில் வளராமல் உள்ளது. சந்தையில் தேவை என்பது அதிகம் இருந்தாலும், வளர்ச்சி பின் தங்கியுள்ளது.
தேவை எங்கு?
இந்தியர்கள் பாரம்பரிய மலர்களான மல்லிகை, சாமந்தி, செவ்வந்தி பூ, ரோஜா மொட்டுக்கள, தாமரை என பலவற்றை பயன்படுத்துகின்றனர். அவற்றை பூஜைக்கு மட்டும் அல்லாமல் தலையிலும் அணிந்து கொள்ள பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தங்களது அலுவலகங்கள், ஆட்டோக்கள், கார்கள் கடைகள் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்துகின்றனர்.
இணைக்கும் தளம்
இத்துணை தேவைகள் இருந்தும் இந்திய மலர் சந்தையானது பிரிந்து கிடக்கிறது. இது ஒழுங்கற்ற முறையில் உள்ளது. இதனால் மலர்கள் மக்கள் கைகளை அடையும் முன்பே அதன் புத்துணர்ச்சியினை இழக்கின்றன. ஆக அதனை ஹூவு மூலம் இணைக்க நினைத்தோம். சிறு விவசாயிகளும் அணுகும் விதமாக வடிவமைக்க முடிவு செய்து, பற்பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு 2019ல் ஒரு தளத்தினை நிறுவ திட்டமிட்டமிட்டோம்.
நேரடியாக விவசாயிகளுடன் இணைப்பு
இப்படி உதயமான ஹூவு இன்று பல விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பில் உள்ளது. வழக்கமாக பூக்களை பறித்து விவசாயிகள் பூ மண்டிக்கு கொண்டு செல்வார்கள். ஆனால் நாங்களே நேரடியாக விவசாயிகளுடம் இணைந்துள்ளோம். இதனால் எங்களின் நேரத்தை நிர்வகிக்க முடிகின்றது. இதனால் 12 – 24 மணி நேரம் குறைகிறது. தற்போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல பூ விவசாயிகளுடன் இணைந்துள்ளோம்.
பேக்கேஜிங்
பூக்களை பெற்ற பிறகு அதனை பாக்டீரியா மற்றும் ஈரப்பதம் இல்லாததாகவும், சுத்தம் செய்கிறோம். எங்களிடம் தரமான பேக்கிங் முறை உள்ளது. இதன் மூலம் நீண்டகாலத்திற்கு பூக்களை பிரெஷ்ஷாக வைத்திருக்க முடிகிறது. இது அதன் ஆயுளை சுமார் 15 நாட்கள் வரையில் வைத்திருக்க உதவுகிறது.
விவசாயிகளுக்கு பலன்
வழக்கமாக பூ மண்டிக்கு கொண்டு சென்று, அதனை விற்பனை செய்து, அதற்கான பில்லை ஒரு விவசாயி கையில் வாங்குவதற்குள் பல மணி நேரங்கள் ஆகி விடும். இதில் போக்குவரத்து செலவு என உண்டு. ஆனால் ஹூவில் அந்த செலவினங்கள் மீதம் என்பதால், விவசாயிகள் ஹூவுக்கு சப்ளை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். பணமும் தரத்தின் அடிப்படையில் செலுத்தப்படுவதால் பிரச்சனை ஏதும் இருப்பதில்லை.
எத்தனை ஆர்டர்கள்?
ஹூவில் பூக்கள் மாலையாகவும், கோர்க்கப்படாமல் தளர்வாகவும், மாலையாக துளசி உள்ளிட்ட பலவற்றையும் சேர்த்தும் என பல வகையில் வழங்குகின்றது. தற்போது ஹூவு மூலம் பெங்களூரு, ஹைத்ராபாத், சென்னை, மைசூர், புனே, மும்பை, குருகிராம் மற்றும் நொய்டாவிலிருந்து மாதத்திற்கு 1,50000 ஆர்டர்களை பெறுகிறோம்.
அகர்பத்தியும் உண்டு
ஹூவில் அகர்பத்தியையும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய நிலையில், அதுவும் வெற்றிகரமாக சென்று கொண்டுள்ளதாக இந்த பூ சகோதரிகள் கூறுகின்றனர்.
மொத்தத்தில் பூ என்பது அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒன்றாக இருந்தாலும், அதனை வெற்றிகரமான வணிகமாற்றிய இந்த பூ தேவதைகளுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லிக் கொள்வோமே.
Subscription based flower delivery: Rs. 8 crore turnover of Hoovu
Subscription based flower delivery: Rs. 8 crore turnover of Hoovu/பூ டெலிவரி மூலம் ரூ.8 கோடி வருமானம்.. அசத்தும் பெங்களூரு சகோதரிகள்..!