வார்டு கமிட்டி பற்றிய மாமன்ற உறுப்பினர்களின் அறியாமை அதிர்ச்சியளிக்கிறது: அன்புமணி

சென்னை: வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் பற்றி மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாதது அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு பகுதிக்குமான திட்டங்களை அப்பகுதி மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து 90% மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியவில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

வார்டு கமிட்டி தலைவராக அந்தந்த வட்டங்களுக்கான மாமன்ற உறுப்பினர்கள் தான் இருப்பார்கள். அவர்களுக்கே இது குறித்த விவரங்களும், அதிகார வரம்புகளும் தெரியவில்லை என்றால், அந்த அமைப்புகளை அவர்கள் எவ்வாறு வழிநடத்துவார்கள் என்ற வினா எழுகிறது.

சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. இந்த அமைப்புகள் தமிழகத்தில் இப்போது தான் முதன்முறையாக கொண்டு வரப்படுகின்றன என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புரிதல் இல்லாமல் இருக்கலாம்.

கிராம சபைகளுக்கு இணையான, சில விஷயங்களில் கூடுதல் அதிகாரங்களைக் கொண்டவை தான் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகள். உள்ளாட்சியில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகும் இந்த அமைப்புகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், மக்களுக்கும் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.